Saturday, July 20, 2013

வீரவணக்கம் - பிரிகேடியர் பால்ராஜ்


Sunday, May 13, 2012

மே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்

வாழ்வில் ஒருமுறை அம்மானிதரின் பக்கத்தில் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ள  வேண்டும் என்பது எனது தனியாத ஆவல். சட்டைப்பையில் எனது இதயத்துக்கு பக்கத்தில் எப்பொழுதும் இருந்தவர், நெஞ்சினில் எப்பொழுதும் குடி இருப்பவர். உன்னை எப்படியும் கூட்டிக் கொண்டு போய் நிழற்படம் எடுத்துக் கொடுக்கிறேன் என எனக்கு ஆசைகளை இன்னும் ஊட்டினார் ஒரு ஜெர்மனி வாழ் ஈழத்து சகோதரர். நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கிறது.

நிழல் அரசாங்கத்தை நடத்தினாலும், தமிழீழம் என்ற  ஒரு நாட்டை தமிழர்களுக்கு வாங்கிக் கொடுப்பார் என நினைத்திருந்தர்வர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி அளித்த நாள்.

ஒற்றுமை இல்லாத தமிழக அரசியல்வாதிகளும், ஈழம் அரசியல் நாடகத்திற்கான ஒரு அங்கமாக பயன்படுத்தியவர்கள், ஈழப்பிணத்தில் ஓட்டுப் பொறுக்கியவர்கள் என்றவர்களுக்கு சளைக்காமல் உணர்வற்ற தமிழர்களும் இந்த மே18 நடைபெற ஒரு அங்கம்.

கலைஞர் அபிமானியாக ஒரு உடன்பிறப்பாக, ஈழத்தைச் சொல்லித் தந்த கலைஞர் ஆட்சிக்காகவா அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காகவா என அறிய முடியாமல் டெல்லியின் தூதுவனான பிரணாப்பின் வருகைக்குப் பின் அடங்கியதும் கண்டு வெட்கப்பட்டு முடங்கி இருக்க வேண்டி இருக்கிறது. ஈழத்திற்காக இழந்த உணர்வான திமுகவினர், மே18க்குப் பின் ஒரு குற்ற உணர்வுடன் நடமாட வேண்டி இருக்கிறது.

என்றைக்கும் அய்யர் ஆட்சியாகிப் போன அதிமுகவிடம் ஈழத்துக்கு தீர்வு கிடைக்காது என்பதும், உணர்வான திமுக 3 ஆண்டுக்குப் பின் டெசோவில் தனி ஈழம் அமைக்க தீர்மானம் இயற்றுவதும் இன்றைக்கு எப்படி உதவப்போகிறதோ.?

ஈழத்து அரசியல்வாதிகள், துரோகிகளாய் மாறிப் போன முன்னாள் தளபதிகள் என தமிழக அரசியல்வாதிகளுக்கு சற்றே குறைவில்லாமல் ஈழத்தில். இப்படிப்பட்ட சூழலில் தமிழர்களுக்கு ஒரு நாடு என நம்புவது குதிரைக்கு கொம்பு முளைப்பதற்கு சமம். தண்ணீருக்கே ஒன்று சேராத தமிழர்கள், இனப்படுகொலைக்கா ஒன்று சேருவார்கள். ? இப்படிப்பட்டவர்களுக்காகவா 30வருட போராட்டத்தை நடத்தினார்?

அய்நாவும், சர்வதேசமும், நாடுகடந்த தமிழீழ அரசும், உணர்வான தமிழர்களும் ஒன்று பட்டு, தமிழீழக் கனவு தேசத்தை அமைப்பது, உணர்வில்லா தமிழர்களால் தமிழீழ தேசம் இழந்த மாமனிதர்களுக்கு, மாவீரர்களுக்குச் செய்யும் உதவி.

தமிழீழக்கனவிற்காக அரசியலைத் தாண்டி என்றைக்கு தமிழர்கள் ஒன்றுபடுகிறார்களோ அன்றைக்கு நிச்சயம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை விட தமிழர்கள் ஒன்று சேர்வார்கள்.

தமிழீழ தேசத்திற்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலி.

Thursday, May 21, 2009

பிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம்

Sunday, February 01, 2009

பிப்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்

பிப்ரவரி -4 பொது வேலை நிறுத்தம்!

இன்னலுறும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பிப்ரவரி 4 பொது வேலை நிறுத்ததிற்கு உங்களின் தார்மீக ஆதரவு கொடுங்கள்.

அலுவலகம் நடக்கும் பட்சத்தில் அலுவலகத்தை ஒருநாள் புறக்கணியுங்கள். உங்கள் புறக்கணிப்பு மேலும் பலரை உத்வேகம் காணவைக்கும்.

காலவரையின்றி கல்லூரிகளை மூடி போராட்டத்தில் கலந்து கொள்ள விடுமுறை கொடுத்த அரசுக்கு நன்றி!

Tuesday, January 20, 2009

என்ன செய்ய?

வன்னி அவலத்தை தமிழகத் தலைவர்கள் படிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இவர்களுக்காக இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவேண்டும் போலத் தெரிகிறது.

வன்னி மக்களை ஒரு சிறு அறைக்குள் அடைத்தது போல அடைத்து அனைத்து வழங்கள்களையும் நிறுத்தி சொல்லன்னா துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு சலாம் அடிக்கும் கூட்டத்தினரின் கண்களுக்கு இந்த செய்திகள் படுமா எனத் தெரியவில்லை.

தினமும் சிகப்பு பட்டையுடன் ராசபக்சேவின் படத்தை போடும் ஹிந்து பத்திரிக்கையின் தர்மம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரிவதில்லை.

பிரபாகரனின் லக்சரி பங்கர் பிடிபட்டதை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் இன அழிப்பு பற்றி காண்பிப்பார்களா என ஏமாற்றத்துடன் பார்க்கும் ஏமாளித் தமிழினம் அடேய் தமிழா உனக்கென்று எந்த ஊடகமும் இல்லையடா என என்றைக்கு சிந்திக்கும்?

ஈழத்தமிழன் எவன் இறந்தாலும் அவன்/அவள் புலி என பரப்பும் செய்தித்தாள்களுக்கு சிறார்களும் கைக்குழந்தைகளும் கூட புலிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. சரி வாங்கிய கூலிக்கு கோசம் போட்டுத்தானே ஆகவேண்டும்.

ராசபக்சேவே மேல் என ஜெயா அம்மையார் ஈழத்தமிழன் யாரும் இறக்கவில்லை என அடித்த அடியை தமிழினம் மறக்கவே மறக்காது.

ராசிவ்காந்தி அவர்கள் இருந்தபோதும் இறந்தபின்னும் ஈழத்தமிழர்களின் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.

புலிகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேவிற்கு காவடி தூக்கும் கூட்டத்தினரின் ஜால்ரா சத்தங்களை இனி அதிகமாக கேட்கமுடியும்.

பாலஸ்தீனத்தின் மேல் தாக்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வைக்க சிலவாரங்களில் முடியும் பொழுது அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துவது அவ்வளவு கடினமா என யோசித்துப் பார்க்கமுடியுமா அடிமைத் தமிழர்களால்?

வன்னி மக்களை கொன்று குவித்தபின் யாருக்காக அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்?

ஈழத்தமிழனுக்காக அழும் என்னைப் போன்ற எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தமிழர்கள் என்ன செய்ய?

எவ்வளவு கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் கிடைக்காத என்னைப் போன்ற தமிழர்கள் என்ன செய்ய?

அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என மூச்சுக்கு முன்னூறு தரம் பேசும் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசாதாது ஏன் என யோசிக்கும் தாழ்ந்த தமிழினம் என்ன செய்ய?

Thursday, October 09, 2008

நாதியற்றது நம் தமிழினமா?



மேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.

தமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா? 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா?

1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. ? இணைந்த கைகள் எங்கே?

அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா?

அமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா?

நம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா? நாதியற்றது நம் தமிழினமா?
தமிழா இன உணர்வு கொள்ளடா!



Saturday, December 08, 2007

பெரியார் தளம்!

திராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய பெரியார் தளம் பற்றி ஒரு நினைவூட்டலே இப்பதிவு.

பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இக்காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் தளம். இத்தளத்தில் அய்யாவின் நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டு தளவிறக்கம் செய்யும் வகையில் இபெரியார் என்ற பகுதி உள்ளது. ஆசிரியர்.கி.வீரமணி அவர்களின் நூல்கள் மற்றும் திராவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்களும் இப்பகுதியில் உள்ளது.

பெரியார் இணைய தொலைக்காட்சி மற்றும் பெரியார் இணைய வானொலி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் பவள விழா நிகழ்ச்சிகள் பெரியார் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த புரட்சியை புலிகள் மாவீரர் நாள் உரையின் போது நேரிடையாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. டெக்னாலஜியில் புலிகள் இன்னும் முண்ணனியில் உள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். பெரியார் இணைய வானொலி டிசம்பர் மாதத்திலிருந்து முழு ஒலிபரப்பை ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது நீங்கள் அய்யாவின் கருத்துக்களையும் பாடல்களையும் கேட்கும் வசதி உள்ளது.

சுயமரியாதை திருமண பதிவு செய்ய, மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் என அனைத்து பகுதிகளையும் இத்தளத்தில் காணலாம். தள முகவரி: www.periyar.org.in

வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் புகழ்!