Tuesday, January 20, 2009

என்ன செய்ய?

வன்னி அவலத்தை தமிழகத் தலைவர்கள் படிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இவர்களுக்காக இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவேண்டும் போலத் தெரிகிறது.

வன்னி மக்களை ஒரு சிறு அறைக்குள் அடைத்தது போல அடைத்து அனைத்து வழங்கள்களையும் நிறுத்தி சொல்லன்னா துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு சலாம் அடிக்கும் கூட்டத்தினரின் கண்களுக்கு இந்த செய்திகள் படுமா எனத் தெரியவில்லை.

தினமும் சிகப்பு பட்டையுடன் ராசபக்சேவின் படத்தை போடும் ஹிந்து பத்திரிக்கையின் தர்மம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரிவதில்லை.

பிரபாகரனின் லக்சரி பங்கர் பிடிபட்டதை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் இன அழிப்பு பற்றி காண்பிப்பார்களா என ஏமாற்றத்துடன் பார்க்கும் ஏமாளித் தமிழினம் அடேய் தமிழா உனக்கென்று எந்த ஊடகமும் இல்லையடா என என்றைக்கு சிந்திக்கும்?

ஈழத்தமிழன் எவன் இறந்தாலும் அவன்/அவள் புலி என பரப்பும் செய்தித்தாள்களுக்கு சிறார்களும் கைக்குழந்தைகளும் கூட புலிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. சரி வாங்கிய கூலிக்கு கோசம் போட்டுத்தானே ஆகவேண்டும்.

ராசபக்சேவே மேல் என ஜெயா அம்மையார் ஈழத்தமிழன் யாரும் இறக்கவில்லை என அடித்த அடியை தமிழினம் மறக்கவே மறக்காது.

ராசிவ்காந்தி அவர்கள் இருந்தபோதும் இறந்தபின்னும் ஈழத்தமிழர்களின் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.

புலிகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேவிற்கு காவடி தூக்கும் கூட்டத்தினரின் ஜால்ரா சத்தங்களை இனி அதிகமாக கேட்கமுடியும்.

பாலஸ்தீனத்தின் மேல் தாக்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வைக்க சிலவாரங்களில் முடியும் பொழுது அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துவது அவ்வளவு கடினமா என யோசித்துப் பார்க்கமுடியுமா அடிமைத் தமிழர்களால்?

வன்னி மக்களை கொன்று குவித்தபின் யாருக்காக அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்?

ஈழத்தமிழனுக்காக அழும் என்னைப் போன்ற எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தமிழர்கள் என்ன செய்ய?

எவ்வளவு கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் கிடைக்காத என்னைப் போன்ற தமிழர்கள் என்ன செய்ய?

அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என மூச்சுக்கு முன்னூறு தரம் பேசும் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசாதாது ஏன் என யோசிக்கும் தாழ்ந்த தமிழினம் என்ன செய்ய?