Saturday, December 09, 2006

காமராசர் பேசுகிறார்

“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது."

"உழைக்கவேண்டியதே ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவோம். எழுதவேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன். எனவே கடவுள் பெயரைச் சொல்லி உங்களை ஏமாற்றுகிறவர்கள்தான் என்னைக் கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு தி.மு.கவும் இப்போது சேர்ந்து கொண்டிருப்பதுதான் விந்தையாக உள்ளது. ரஷியாவிலும் அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடைய நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காகப் பாடுபடவேண்டும். அதிகம் உழைக்க வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுளை எண்ணிக் கொண்டு கைகட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?”

“அவனவன் தலை எழுத்துப்படி நடக்கட்டும் என்பதுதான் சுதந்திராக் கட்சியின் தத்துவமாக உள்ளது. எவன் தலையில் எவன் எழுதினான் என்று சொல்லட்டுமே! தலை எழுத்து என்று ஒன்று உண்டென்றால் அதை மாற்றியே ஆகவேண்டும். இதற்காகவே சண்டை போடுகிறேன்.”

“அன்று பள்ளிகளை மூடினார் ராஜாஜி. நான்தான் காங்கிரசிலிருந்து போகச் சொன்னேன். அந்தக் கோபம் அவருக்கு இன்னும் தீரவில்லை. 53இல் செய்ய முடியாததை எல்லாப் பள்ளிகளையும் மூட முடியாமற்போனதை இப்போது செய்யப் பார்க்கிறார். அதுவும் தி.மு.க.வைக் கொண்டு செய்துவிட நினைத்துச் சூழ்ச்சி செய்கிறார். இந்தச் சூழ்ச்சி என்னிடம் பலிக்காது. மக்கள் அறிவற்றவர்களாகவே இருக்கவேண்டும் என்பது அவர் தர்மம். தாம் தர்மத்தைக் காப்பதாக ராஜாஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் இல்லை என்றால் தர்மமே இல்லாமல் போய்விடுமா? இவர் தர்மம்தான் என்ன? 1953இல் தான் பார்த்தோமே குலக்கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளை மூட முயற்சித்தார். அந்த முயற்சியில் தோல்வி கண்டார். இப்போது தி.மு.க.வின் உதவி கொண்டு நிறைவேற்ற எண்ணுகிறார். ராஜாஜியைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விட மாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதை மாற்றியே தீருவேன்.

“உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளை இந்த நாட்டில் நீண்ட காலமாக இருந்துகொண்டு மக்களை மடமையில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நாட்டிலே உயர்ந்த சாதி என்பவன் அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் அவன் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்பதற்காக உத்தமன் ஆகிவிடுகிறான். உதாரணமாகப் பாரதத்தில் வரும் தர்மன் ஆட்சியை, தன் உடன்பிறப்பை, தன் மனைவியை, ஏன் தன்னையே அடகு வைத்துப் பகடையாடினான். அவனை நம் நாடு தர்மவான் எனப் போற்றுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதற்காகச் சமுதாயக் குற்றச் சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். ஆனால் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும் இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவைப் போக்கி அனைவரும் சமம் என்ற ரீதியிலே மக்களை மக்களாக நடத்துவதுதான் சமதர்மம்.”

Source: Unmaionline.com

3 Comments:

Blogger இவன் said...

//அவர் சதி இனி ஒன்றும் பலிக்காது. நான் இருக்கும் வரை அதைப் பலிக்க விட மாட்டேன். பயப்படவும் மாட்டேன். ஏழை ஏழையாகவே இருக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். அவரது தர்மம் அப்படிச் சொல்கிறது. அதை மாற்றியே தீருவேன். தனி ஒருவனாக நிற்க வேண்டி வந்தாலும் அதை மாற்றியே தீருவேன்.//

மேலே சொன்ன கோட்பாட்டால் தான் தமிழ் நாட்டு மக்கள் இப்பொழுது உள்ள அளவாவது கல்வி அறிவும் மக்களிடம் சீரான பொருளாதார வளர்ச்சியும் பெறமுடிந்தது.

இதனை பீகார், ஓரிஸா மற்றும் பெங்கால் மாநிலங்கள் சென்று வந்தவர் மிக நன்றாக உணர்வர்.

கல்வி தந்தை காமராஜர் மட்டும் இல்லை என்றால் தமிழகம் என்றோ கற்காலத்தை நோக்கி சென்றுயிருக்கும்.

December 09, 2006 11:00 am  
Blogger கருப்பு said...

அப்படிப்பட்ட, குலக் கல்வியை ஆதரித்த ராஜாஜி என்ற தேசவிரோதியை மாமனிதர் என்று பதிவு எழுதினான் சோண்டு. நான் நாய் மனிதர் என எழுதினேன்.

படித்துப் பாருங்கள் பகுத்தறிவு.

December 09, 2006 12:17 pm  
Blogger மாசிலா said...

நல்ல பதிவு.

தமிழர்களை அழிக்க புறப்பட்டிருந்த சமூக விரோதி ராஜாஜியை காமராசர் நன்றாகவே அடையாலம் கண்டுகொண்டிருந்தார் என்பது விளக்கமாக புரிகிறது. தன் மக்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்த தலைவர்தான் பெருந்தலைவர் காமராசர்.

நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

December 09, 2006 8:44 pm  

Post a Comment

<< Home