Sunday, June 24, 2007

ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் (பகுதி 1) - ராசேந்திரன்

>>>>>>>சாதித்துவ நெருப்பில் நந்தனை எரித்த வரலாற்றுத் தொடர்ச்சியாய் ஒரிசாவில் 'இந்துத்துவ' நெருப்புக்கு இரையாக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பாதிரியார் "கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ்" மற்றும் அவரது அன்பு மகன்கள் "பிலிப்ஸ் (வயது 9)" "திமோத்தி (வயது 7) நினைவிற்கு....<<<<<<<

ஒரு முன்னோட்டம்!

1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி! தமிழ்நாட்டில் - அன்றைய தினம், ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி - இந்தியா முழுவதையுமே குலுக்க ஆரம்பித்தது! திருநெல்வேலி மாவட்டத்திலே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சாதிக் கொடுமைகளால், இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு அந்த தேதியில்தான் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்!

மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் - தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் துவக்கிடும் முயற்சிகளில் நாடு முழுவதும் தீவிரம் காட்டி செயல்பட்டனர். என்றாலும், அவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை!

அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு - இந்த மதமாற்றம் ஒரு வாய்ப்பாகப் பயன்பட்டது. டில்லியிலிருந்து - பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தக் கிராமத்திலே முகாமடிக்க ஆரம்பித்தனர்! மத மாற்றம் ஒரு 'தேசிய அதிர்ச்சியாக' பிரபலப்படுத்தப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு தத்துவம்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் - அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டிருந்தது.ஆனால் - அதே அவசர நிலை காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பன ஆலோசகர் ஆட்சி நடந்தபோது ஆர்.எஸ்.எஸ் தத்துவம்தான் இங்கே ஆட்சி புரிந்தது! பார்ப்பன சங்கராச்சாரி ஆட்சிதான் தமிழ் நாட்டிலேயே கோலோச்சியது.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவின் சமூக அமைப்பே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வலியுறுத்தும் வர்ணாஸ்ரம தர்மத்தை சாதிய வடிவத்தில் அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது. இதை முழுமைப்படுத்திட வேண்டும். இந்து நாடே ஒரு முழுமையான இந்து ராஷ்டிரமாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடுதான் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டங்களை முடுக்கி விடுகிறது.

கெஞ்சினால் மிஞ்சுவதும் , மிஞ்சினால் கெஞ்சுவதுமான இந்த தந்திரக்காரர்கள்; தங்கள் அமைப்புக்கு பெரும் தலைவர்களின் ஆதரவெல்லாம் இருப்பதாக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி- அதன் மூலம் அப்பாவிகளை மயக்கப் பார்ப்பது இவர்களின் நடைமுறை தந்திரம்!இந்தக் கூட்டத்தின் வரலாற்றுக் கலாச்சாரமே இப்படித்தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டமுடியும்.

இதோ ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டுகிறோம். மத்தியில் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதற்கு காரணமாயிருந்தது இரட்டை உறுப்பினர் (Duel Membership) பிரச்சனை! அதாவது ஜனதா கட்சியிலே அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆகலாமா? என்ற பிரச்சனை. இது அப்போது மட்டும் ஏற்பட்டதல்ல. 1934-ம் ஆண்டிலேயே அந்தப் பிரச்சனை காங்கிரஸ் கட்சியிலேயே ஏற்பட்டிருக்கிறது!

1934-ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மாணத்தையே நிறைவேற்றியது; என்ன அந்தத் தீர்மானம்?காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது.இந்தத் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் காங்கிரஸ் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியது! உடனே காந்தியாருக்கு வலைவீசும் தந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மேற் கொண்டார்கள். அதே ஆண்டு 'வார்தா'விலே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது! அதைப் பார்வையிட வரவேண்டும் என்று காந்தியாரை அழைத்தார்கள். ஹெட்கேவர் - என்ற நாக்பூர் பார்ப்பனர், காந்தியாரை நேரில் போய் சந்தித்துப் பேசினார்! காந்தியாரும் முகாமைப் பார்வையிட்டார்!உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் பிரச்சார சாதனங்கள் மூலம் திட்டமிட்ட ஒரு கருத்தைப் பரப்பினர். "ஆர்.எஸ்.எஸ். சேவைகளை காந்தி அடிகள் நேரில் பார்த்து பாராட்டினார்."
என்பதே அந்தப் பிரச்சாரம்!

ஆனால் - இது உண்மைக் கலப்பில்லாத பொய்ப் பிரச்சாரம்! காந்தியார் - பாராட்டு எதுவுமே தெரிவிக்கவில்லை; அப்படி தெரிவித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது மட்டுமல்ல; காங்கிரஸ்காரர்கள் - ஆர்.எஸ்.எஸ். சில் சேரத் தடைவிதித்து காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணமும் அப்படியே இருக்கட்டும் என்றார் காந்தியார். காந்தியாரோடு 'வார்தா' பயிற்சி முகாமுக்கு உடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்ல சேவைகளை செய்கிறார்கள் என்று காந்தியாரிடம் சொன்னபோது - காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமோ?

"ஹிட்லரின் நாசிப்படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்." இப்படி ஹிட்லர், முசோலினியின் நாசிச, பாசிசப் படைகளோடு , ஆர்.எஸ்.எஸ்ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியாரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.!

"Mahatma Gandhi, the last Phase" என்ற காந்தியாரின் சுயசரிதையை அவரது உதவியாளர் பியாரிலால் (Pyarilal) எழுதியிருக்கிறார். அந்த நூலின் 440வது பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பற்றி காந்தியார் சொன்ன மேற்கண்ட கருத்துக்கள் எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது.

தொடரும்...

0 Comments:

Post a Comment

<< Home